Sunday, November 6, 2016

பேலியோவில் கொழுப்பு சாப்பிட்டும் டிரைகிளிசிரைட் குறைவது எப்படி?

 


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

கொழுப்பு சாப்பிடால் கொலஸ்டிரால் வரும் என 1970களில் பயமுறுத்தியதில் கொழுப்பை நீக்கி, அதிக மாவுச்சத்து உணவுகளான இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு மாறினோம். எல்லோருக்கும் ரத்த கொழுப்பளவு குறைந்திருக்கிறதா? அல்லது கூடியிருக்கிறதா? உடனே செக் செய்து பாருங்கள். கூடியிருக்கலாம்.

ஆனால் அதிக கொழுப்பு நிரம்பிய பேலியோ எடுக்கும் போது டிரைகிளிசிரைட் குறைகிறது. எப்படி இந்த ஆச்சரியம் நிகழ்கிறது? நாம் மாவுச்சத்து அதிகம் உண்ணும் போது இன்சுலின் அதிகம் சுரக்கிறது. இன்சுலின் உணவில் உள்ள தேவைக்கதிகமான கார்புகளை டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பாக மாற்ற தூண்டுகிறது. டிரைகிளிசிரைட் அளவுகள் அதிகரிக்கின்றன. நாமும் தினமும் மூன்று வேளை கார்புகள் எடுத்து, கொழுப்பை அதிகரித்த வண்ணம் உள்ளோம்.

அதுவே கார்புகள் கம்மியாக (பேலியோ) எடுக்கும் போது க்ளுக்ககான் மற்றும் அட்னிரலின் அதிகரிக்கின்றன. இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதனால் கொழுப்பு செல்களில் கொழுப்பை உடைய வைக்கும் லைப்பேஸ் எனும் என்சைம் தூண்டப்பட்டு, சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைந்து சக்திக்காக எரிக்கப்படுகிறது. இன்சுலின் கம்மியாக சுரப்பதால் புதிதாக டிரைகிளிசிரைட் உறப்த்தியாகாது. டிரைகிளிசிரைட் உறபத்தி கம்மி மற்றும் அதன் எரிப்பு அதிகமென்பதால் இதன் அளவு கம்மியாகிறது. நாமும் இளைக்கிறோம்.

பேலியோவில் உணவில் எடுக்கும் அதிக டிரைகிளிசிரைட் என்னாகிறது? அவை நேராக ஈரலுக்கு செல்லாமல் கொழுப்பு செல்களுக்கு சென்று ஸ்டோர் செய்யப்படுகிறது. அதிக கொழுப்பு எடுத்தவுடன் பார்த்தால் டிரைகிளிசிரைட் அதிகமாக இருக்கும். ஆனால் அன்றே அவை எரிக்கப்பட்டு, ஸ்டோரில் உள்ள பழைய கொழுப்பும் எரிக்கப்பட்டு காலை உணவிற்கு முன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் கம்மியாக இருக்கும்.
இது தான் கொழுப்பை கொழுப்பால் எரிப்பது.

நம் முன்னோர்களில் நாம் சிம்பன்சிக்கு மிக நெருக்க சொந்தமாவோம். மற்ற அனைத்து வகை குரங்குகளும் சுத்த சைவம் அல்லது சிலது பூச்சிகளை உண்ணும். ஆனால் சிம்பன்சியின் உணவில் 5% மாமிசம் இருந்துள்ளது. தன் எல்லைக்குள் வேறு வகை குரங்கு வந்துவிட்டால், கூட்டமாக சிம்பன்சிகள் அந்தக் குரங்கை அடித்து சாப்பிட்டு விடும். மற்ற நேரங்களில் பழம் கொட்டைகள், இலைகள் என்று நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
இதன் வாரிசான Australopithecus africanus குரங்கு, சிம்பன்சியை விட நான்வெஜ் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டது.

அதன் பின் வந்த homo erectus மனிதன் கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து மாமிசத்தை கிழித்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு வந்த நியண்டர்தால் மனிதன் மிக சிறந்த வேட்டையன் ஆவான். மிக அதிக அளவில் மாமிசம் தின்றான். சிறிய அளவில் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பழங்கள் தின்றான்.

அதன் பிறகு வந்த நாம் homo sapiens, நியண்டர்தால் மனிதனின் அதே உணவை உண்டோம். ஆனால் நியண்டர்தாலை விட கொஞ்சம் அதிகம் கார்ப் உணவுகள் உண்டோம். அதனால் நம் உடல் அதிக கொழுப்பு, மித அளவு புரதம், கம்மி கார்ப் என்ற நிலைக்கு செட்டானது.

சூழ்நிலை 1: அதிக கொழுப்பு, மிக கம்மி கார்புகள்: மனிதன் வேட்டைக்கு சென்று மாமிசம் கிடைத்த நாளில் அதிகம் அவற்றை உண்டான். அதில் உள்ள கொழுப்பு அவனுக்கு சக்தியளித்தது. மாமிசம் மட்டும் சாப்பிடும் போது மனித உடல், அதை சேமிக்காது. கொழுப்பை கீட்டோன் எனப்படும் சிறிய வகை கொழுப்பாக மாற்றி உடலின் பல செல்களுக்கும் அனுப்பி அவற்றை எரித்து விடும். இதனால் டிரைகிளிசிரிட் எனப்படும் ரத்த கொழுப்பின் அளவு குறையும். இப்படி எரிக்கும் போது கொழுப்பிலிருந்து கம்மி சக்தியே மனிதனுக்கு கிடைக்கும். அதனால் அவன் தினசரி வேலைகளுக்காக அதிக கொழுப்பு எரிகிறது. (மிருகங்கள் அதிகம் கிடைக்கும் நாளில்-->மாமிசம் மட்டும் உண்ணுதல்-->அதிக கலோரிகள் கிடைத்தாலும் உடம்பு அதை சேர்க்காமல் எரித்து விடுதல்).

சூழ்நிலை 1ன் வேதியியல்: அவன் கார்ப் கம்மியாக உண்பதால் கார்பிலிருந்து oxaloacetate கிடைக்காது(சாப்பிடும் கார்புகள் ரத்த செல்களுக்கும் மூளைக்கும் சக்தியளிக்க ஒதுக்கப்பட்டு விடும்). oxaloacetate இருந்தால் தான் கொழுப்பு அதிக சக்தி தரும் TCA cycle க்குள் செல்ல முடியும். oxaloacetate இல்லாததால், கொழுப்பு சக்தி கம்மியாக தரும் கீட்டோன்களாக மாறுகிறது. அதிகமான கொழுப்பு இப்படி செலவிடப்படுகிறது

சூழ்நிலை 2: அதுவே மாமிசம் கிடைக்காத பொழுது காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் உண்ணும் போது அவை சக்திக்காக எரிகின்றது. அதிகமாக உண்டால் அவை கொழுப்பாக மாறுகிறது. கம்மியாக உண்டால், உடலில் உள்ள கொழுப்பு எரியும். ஆனால் அதிகம் எரியாது.

சூழ்நிலை 2ன் வேதியியல்: கம்மியாக கார்ப் உண்ணும் போது உடலில் உள்ள கொழுப்பு எரிந்து சக்தி தரும். ஆனால் கம்மியான கார்பிலும் oxaloacetate கிடைத்து விடுவதால், கொழுப்பு TCA cycle வழியாக எரியும். கீட்டோன்களாக அல்ல. அதனால் கொஞ்சம் கொழுப்பிலிருந்தே அதிக சக்தி கிடைக்கும். உடல் பெரிதாக இளைக்காது.

சூழ்நிலை 3: சாப்பிடாமலேயே இருந்தால்:கொழுப்புகள் கீட்டோன்களாக கரையும். ஏனென்றால் oxaloacetate இல்லை. உடல் இளைக்கும்

சூழ்நிலை 4: தினமும் கார்புகள் மட்டுமே எடுத்தல்: முந்தைய போஸ்டில் சொன்னது போல, கார்புகள் மட்டுமே எடுத்தால் அவை லைட்டாக எரியும், மற்ற கார்புகள் கொழுப்பாக மாற்றப்படும், உடலில் உள்ள கொழுப்பு எரியவே எரியாது. காரணம்-அதிக இன்சுலின் அளவு.

மனிதன் மாமிசம் அதிகம் சாப்பிட்டான். கிடைக்காத நாளில் காய்கறிகள் பழங்கள் கொட்டைகள் சாப்பிட்டான். அதனால் அவன் உணவுமுறை அதிக கொழுப்பு, கம்மி கார்புகள் என்று பழகியது. அதுவே பேலியோ டயட். கொழுப்பை வேகமாக கீட்டோன் முறையில் எரிப்பதால் டிரைகிளிசிரைட் எனும் கொழுப்பு அளவு குறைகிறது

No comments: