Thursday, November 17, 2016

டயபடிஸின் கதை



3500 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முதலாக டயபடிஸ் என ஒரு வியாதி இருப்பது அன்றைய எகிப்தில் கண்டறியபடுகிறது. அன்று டயாப்டிஸ் என்பது அதிக சிறுநீர் சுரப்பதே என நம்பினார்கள். அதனால் அதற்கு மருந்தாக ஒரு குடுவையில் நீர், பேரிச்சை, பியர், பால், சில மூலிகைகளை கலந்து குடிக்க கொடுத்தார்கள். அப்போதும் குணமாகவில்லையெனில் (எப்படி குணமாகும்?) அடுத்த கட்ட சிகிச்சையாக படுக்க வைத்து பின்புறத்தில் ஆலிவ் ஆயில், தேன், பியர், உப்பு மற்றும் சில பழங்களின் விதைகளை உள்ளே விடுவார்கள். நோயாளி வலியில் துடிதுடித்து போய்விடுவார்
முதல் முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்ரடிஸ் தான் டயபடிஸ் இருந்தால் குறைவாக உண்னவேண்டும், உடல்பயிற்சி செய்யவேண்டும் என கூறினார். ஆனால் அவரும் டயபடிஸ் என்பது உடல் தசைகள் சிறுநீராக மாறி கரையும் வியாதி என நம்பிக்கொண்டிருந்தார். இந்த சூழலில் இந்தியாவில் ஆயுர்வேதத்தில் டயாப்டிஸின் பல புதிர்கள் விடுவிக்கபட்டன. டயபடிஸ் வந்தவர்கள் சிறுநீரை எறும்புகள் சூழ்வதை கண்ட சுஷுர்தரும், சருகரும் டயபடிக்குகளின் சிறுநீரை குடித்து பார்த்தார்கள். டென்சனாக வேண்டாம்..அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புரட்சி. அதன்பின் 19ம் நூற்ரான்டுவரை ஒருவருக்கு டயபடிஸ் இருக்கா இல்லையா என்பதை கண்டறிய இதுவே வழியாக இருந்தது.
சிறுநீர் இனிப்பாக இருப்பதை கண்ட அவர்கள் டயபடிஸுக்கு மதுமேகம் என பெயரிட்டார்கள். மது என்பது தேனை குறிக்கும், சிறுநீர் தேன் போல இனிப்பதால் இப்பெயர். அந்த பெயரே இன்றளவும் நீடித்து டயபடிஸ் மெடில்லஸ் என இவ்வியாதி அழைக்கபட காரணம், மெடிலஸ் என்றால் தேன் எனப்பொருள்
தவிரவும் சுஷுர்தரும், சருகரும் தான் முதல்முதலாக டைப் 1 டயபடிச், டைப் 2 டயபடிஸ் என இருவகை வியாதிகள் இருப்பதை கண்டறிகிறார்கள். அதாவது குண்டாக இருப்பவர்களுக்கு வரும் டயபடிஸ் டைப் 2 டயபடிஸ், ஒல்லியாக இருப்பவர்களுக்கு வரும் டயபடிஸ் டைப் 1 டயபடிஸ், டைப் 1 டயபடிஸ் வந்தவர்கள் நீண்டநாள் உயிர்வாழ மாட்டார்கள் என்பதை கண்டறிந்தார்கள். மதுமேகம் பெரும்பாலும் குண்டானவர்களுக்கே வருவதை கண்ட சுஷ்ருதர் சுஷ்ருத சம்ஹிதை எனும் நூலில் இதற்கு தீர்வாக உடல்பயிற்சியை பரிந்துரைத்தார். சில சூரணங்களும் பரிந்துரைக்கபட்டன. பிளட் பிரசரையும் சுஷ்ருதர் அறிந்திருந்ததாக தெரிகிறது. வாதரக்தம் எனும் பெயரில் அவர் குறிப்பிட்டிருந்த நோய் இன்றைய பிரசருக்கு ஒப்பானதாக தெரிகிறது
அதன்பின் அராபியர் மூலமாக இந்த நூல்களும், விஞ்ஞானமும் ஐரோப்பாவுக்கு சென்றன. டயபடிஸுக்கு வெந்தயத்தை கரைத்து குடிக்கும் வைத்தியம் 10ம் நூற்ரான்டு அரபு மருத்துவ நூல்களில் காணபடுகிறது.
16ம் நூற்ராண்டில் தான் முதல் முதலாக டயபடிக்குகளின் யூரினில் இருப்பது சர்க்கரை என்பது கண்டறியபட்டு, அது கிட்னியில் இருந்து வருவதல்ல, ரத்தத்தில் இருந்து வருவது என கண்டறியபடுகிறது
17ம் நூற்ராண்டில் நவீன உலகின் முதல் டயபடிக் மருத்துவ நூல் எழுதபடுகிறது. டயாப்டிஸ் வந்த இருவருக்கு பரிந்துரைக்கபட்ட உணவு:
காலை: முட்டை, பிரெட் பட்டர்
மதியம்: ரத்த கட்டிகள் மற்றும் பன்றிக்கொழுப்பு
இரவு உணவு: கெட்டுபோன மாமிசம், பிராந்தி
இந்த உணவை உண்டு தினமும் தம் சிறுநீரை அருந்தி அதில் இருக்கும் இனிப்பின் அளவை கண்டறிய அவர்கள் பணிக்கபடுகிறார்கள். வியப்பளிக்கும் வகையில் அவர்களது சிறுநீரின் இனிப்புசுவை இறங்கிகொண்டே செல்கிறது. அதன்பின் ரொட்டியும், உருளைகிழங்கும் உணவில் சேர்க்கபடுகிறது. உடனடியாக மூன்று கிலோவுக்கு மேல் எடை ஏறி இனிப்புசுவையும் சிறுநீரில் அதிகரிக்கிறது. ஆக டயாப்டிஸ் உள்ளவர்களுக்கு பிராந்தி, இறைச்சி, முட்டை ஆகியவை பரிந்துரைக்கபடுகின்றன
1911ல் இன்சுலின் கண்டுபிடிக்கபட்டபின் டயட் மேல் மக்களுக்கு ஆர்வம் குறைந்து என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், இன்சுலின் எடுத்துக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்

 -- Neander Selvan

No comments: